தொழிலுக்கு சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக கரையொதுங்கல் (படங்கள்)!!

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் இருவரது சடலங்களும் காயன்கேணி கடல் பரப்பில் இருந்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

கண்ணகி அம்மன் கோவில் வீதி காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம்(வயது 56) என்ற தந்தையும் அகிலவாசன் (21 வயது) மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை வழக்கம் போல் இருவரும் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் கரையை திரும்பாமல் நேரமாகியதால் சந்தேகம் கொண்டு உறவினர்கள் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது,

அவர்கள் சென்ற படகு தனிமையில் கடல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் பிரதேசத்தின் உள்ளுர் சுழியோடிகள் மற்றும் கல்குடா தியாவட்டவான் சுழியோடிகள் இணைந்து காலை முதல் மாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டு அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சடலங்களை மீட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று இருவரும் குறித்த காயான்கேணி கடல் பரப்பில் அதிக மீன் பிடியில் ஈடுபட்டு இலாபம் பெற்றுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மேலும் மீன் பிடிக்க மறுநாள் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,

கடலில் காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் தாக்கம் காரணமாக படகில் இருந்த ஒருவர் தவறி கடலில் வீழ்ந்திருக்கலாம் என்றும் இதன்போது மற்றையவர் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சி இருவரது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் இருவரது மரணங்கள் பிரதேசத்தில் சோகத்தினை எற்படுத்தியுள்ளது.

இதேபோன்று,

கடந்த பொங்கல் தினமன்று (14) கிரான் நாகவத்தை கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *