ஏமனில் விமானநிலைய நுழைவு வாயில் அருகே பாரிய வெடி விபத்து…. சம்பவ இடத்திலேயே 12பேர் உடல் சிதறிப் பலி!!
ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா, என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை அன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய ரக வாகனம் வெடித்துச் சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த வாகனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சம்பவம் பலமாக இருந்துள்ளதுடன்,
நகரம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுமுள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவத்தினால் அருகிலுள்ள குடியிருப்புகளின் யன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பலர் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏடன் என்பது ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தற்காலிக இல்லமாகும். இது சவுதி அரேபியாவின் ஆதரவுடன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானுடன் இணைந்த ஹவுதி குழுவுடன் போராடி வருகிறமை குறிப்பிடதக்கது.