பரீட்சை எழுதிவிட்டு நீரில் மூழ்கி இறந்த பத்து வயது சிறுமி!!
புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு கடலில் நீராட சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை திருகோணமலை இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பாசல்மாவத்த -ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஸானி ஹன்சலா (10 வயது) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதுடன் நீரில் மூழ்கிய சிறுமி கன்னியா வீதி- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அயோத்யா (10 வயது) எனவும் தெரியவருகின்றது.
நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு தனது வகுப்பாசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்கு சென்றபோது பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீரில் மூழ்கிய சிறுமி அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.