2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு பிரச்சினைகள் பதிவு….. L.M.D.தர்மசேன!!
நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.
புலமை பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு பிரச்சினைகள் பதிவாகியுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன (L.M.D. Dharmasena) தெரிவித்துள்ளார்.
சில பரீட்சை மத்திய நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
பரீட்சை நடைபெற்ற பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுவர் கடிகாரம் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும், ஏனைய பாடசாலைகளிலிருந்து பரீட்சை நடைபெற்ற பாடசாலைக்கு வருகைத் தந்து, பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அவ்வாறான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன்,
நேரம் கடந்து பரீட்சை வினாதாள்கள் வழங்கப்பட்ட போதிலும், அவ்வாறு தாமதித்த நேரத்திற்கு சரியான நேரத்தை விடை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
அதேவேளை,
விடை எழுதுவதற்கு தாள்கள் வழங்கப்படாமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில்,
மாணவர்களினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, விசாரணைகளின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை,
நேற்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.