வவுனியா கன்னாட்டி பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்….. தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!
வவுனியா – கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது 9 வயதான மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று(16/06/2023) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.
இதன்போது,
வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.
விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
மற்றொரு மகள் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்தச் சிவலோகநாதன் சுபோகினி (வயது – 38), நிருபா (வயது – 9) என்ற இருவரே மரணமடைந்தனர்.
விபத்து இடம்பெற்ற போது டிப்பர் வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர்.
விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விபத்தையடுத்து, பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்ப்பட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் புத்தகப்பை, காலணி என்பன வீதியோரம் வீசப்பட்டுக் கிடந்தமை அங்கிருந்தவர்களின் மனதை ரணமாக்கிய சம்பவமாக பதிவாகியிருந்தது.