வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பாக்குத்தெண்டலுடன் ஆரம்பம்!!

முல்லைத்தீவு  மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று(30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு,

ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,

இம்முறை கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆலய கிரிகைகள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உற்சவம் நேற்று(30/05/2022) அதிகாலை வேளையில் இடம்பெற்றது.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் நேற்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து,

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்குச் சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.

கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர்வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்தம் எடுத்தல் காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப்பொங்கல் சடங்கு பற்றி கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இந்த பாக்குத்தெண்டல் உற்சவமாகும்.

இந்த சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உற்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும்.

இன்று பாக்கு தெண்டலுடன் ஆரம்பமான இவ்வாண்டுக்கான (2022) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் 06-06-2022 திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும்,

அதனைத் தொடர்ந்து  திங்கட்கிழமை(13-06-2022) வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *