மன்னாரில் கொவிட் மரணம் அதிகரிப்பு – வைத்தியர் ரி.வினோதன் தெரிவிப்பு!!
மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த 9ஆம் திகதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கீரி பகுதியைச் சேர்ந்த( 77 வயதுடைய) வயோதிபர் ஒருவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி, இன்று உயிரிழந்துள்ளார்.
அத்துடன் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையிலான காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 220 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.