கோண்டாவில் வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் மூவர் கைது!!

யாழ். கோண்டாவில் – செல்வபுரம் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (04) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

மானிப்பாய், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட கூரான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கோண்டாவில் – செல்வபுரம் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 09 பேர் காயமடைந்தனர்.

மோட்டார்சைக்கிள்களில் பயணித்தவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் தங்கியிருந்த வீடொன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.

குழு மோதலே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய, ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருப்பதற்கு உதவி புரிவோரும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விசேட பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பில் மேலதிகள விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *