News

சரியாக நிறுத்தப்படாத பாரவூர்தியால் உடல் சிதைந்து பலர் பலி!

தாய்வானில் லொறியும் புகையிரதமும் விபத்திற்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தண்டவாளத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாய்வானின் தாய்டங் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கிய போதே இந்த விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்ததோடு, உள்ளே இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். பல பயணிகளின் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தடம்புரண்ட ரயிலுக்கு அருகில் லொறி ஒன்றின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொறி ஒன்று சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லொறி மீது மோதியதாலேயே ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *