அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் ஆறுடன் இருவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹேனகமவில் உள்ள திருத்தகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கம்பகா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,
வெலிவேரிய ஹேனகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத இந்த அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பாகங்களாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு,
பின்னர் அசெம்பிள் செய்து விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.