தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தலிபான்கள் பகிரங்கப்படுத்திய செய்தி என்ன? ஸ்ரீலங்காவிற்கு மகிழ்ச்சியா??

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு தொடர்பிருக்கவில்லை” என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது,

இலங்கையில் ஒரு “ஒருநாள் செய்தி”. அவ்வளவுதான். இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்த வில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஆப்கான் மக்களுக்கு உரிமை இருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக முதலில் அன்றைய சோவியத், பின்னர் இன்றைய அமெரிக்கா என்ற இரண்டு வல்லரசுகளின் விளையாட்டு திடலாக ஆப்கான் ஆகியது.

தலிபான், முஹாஹிஜிதீன்களின் நிர்மாணத்திற்கே அமெரிக்கர் தான் பிள்ளையார்-சுழி போட்டனர். ஆனால், இடைக்காலத்தில் வந்து போன தலிபான்களின் ஆட்சியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை.

அனைத்துலகம் ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமை பட்டயத்தை மிகவும் ஆவேசமாக தலிபான்கள் மீறினார்கள். அனைத்துமே மேற்கத்திய ஊடக அவப்பிரசாரம் என்று அவர்கள் இன்று பூசி மெழுக முடியாது.

எனினும் இன்று காலம் அவர்களுக்கு பாடம் படிப்பித்து இருக்கும் என நம்புவோம். வல்லாதிக்க நோக்கங்களுக்கு வெளியே தம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க அப்பாவி ஆப்கான் மக்களுக்கு இருக்கின்ற உரிமையை, முதலில் ஆப்கான் ஆட்சியாளர்கள்தான், அவர்கள் எவராக இருந்தாலும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கான் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும். சமூக நீதி, சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செய்வதற்குமான ஆப்கான் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஆப்கான் மக்களுக்கு, இது “நம்ம ஆட்சி” என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும்.

நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று, கடந்த 20 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கான் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்த கூடாது. இல்லா விட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது.

ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம். அப்பாவி ஆப்கான் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது.

“புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை” என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது, இலங்கையில் ஒரு “ஒருநாள் செய்தி”. இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்த வில்லை.

கடந்த இடைக்கால தலிபான் ஆட்சியில், “பாமியன்” உலக பெளத்த மரபுரிமை சின்னங்கள் குண்டால் தகர்க்கப்பட்டமை உண்மைதானே. இதுபோன்ற ஆவேச முட்டாள்தனங்களை செய்யாமல் ஆப்கான் மக்களின் உடனடி தேவையான நிம்மதியை பெற்றுத்தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்த தலிபான்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமது மக்களை நேசிக்கும் பொறுப்புள்ள ஆட்சியாளராக தம்மை மாற்றிக்கொள்வதும், காட்டுவதும்தான், ஆப்கனை ஆக்கிரமித்திருந்த வல்லரசுகளுக்கு தலிபான்கள் தரக்கூடிய பதில் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *