இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் அரிசியின் விலை!!

இலங்கையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக புறக்கோட்டை சந்தையை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, அரிசி தட்டுப்பாடு காரணமாக அது நீக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தது.

இருப்பினும், சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய,

புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அரிசி ஆலை உரிமையாளர்களால் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டதோடு ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபா எனவும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபா எனவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது. எனினும், குறித்த விலையை மீறி அதிக விலைகளில் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.

அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் எனவும் நுகர்வோருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *