முடிவுகளுக்காக காத்திருக்கும் இலங்கை!

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள வல்லுநர்கள் நடத்திய சோதனைகளின் முடிவுகளை இலங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முடிவுகள் கிடைத்தவுடன் முதல் கொரோனா தடுப்பூசிகளுக்கு பதிலாக வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து இலங்கை முடிவெடுக்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சில நாடுகளில் தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தும் செயற்பாடு நடைமுறையில் உள்ளது. ஏனைய நாடுகளில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் 900,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் எதிர்கொள்ளும் கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாக இந்தியாவினால் இரண்டாவது தடவையாக தடுப்பூசிகளை அனுப்ப முடியவில்லை.

தடுப்பூசிகளின் பற்றாக்குறை இலங்கைக்கு மாத்திரம் அல்ல. இதேபோன்ற நிலைமை வளர்ந்த நாடுகளிலும் எதிர்கொள்ளப்படுவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதன் விளைவாக வளர்ந்த நாடுகள் கூட தடுப்பூசிகளைக் கலந்து செலுத்துவதற்கான வாய்ப்பை பரிசோதனை செய்து வருகின்றன என்றும் சுகாதார அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *