மருத்துவர்கள் உட்பட வடக்கில் 29 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், தாதியர்கள் மூவர் உட்பட 19 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் இருவர், தாதிய உத்தியோகத்தர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

காரைநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பேருந்து சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

திருநெல்வேலி பொதுச் சந்தையைச் சேர்ந்த மேலும் இரண்டு தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாந்தை மேற்கை சேர்ந்த 62 வயதுடைய ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கு தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *