யாழ் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் (Teaching Hospital Jaffna) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சேவையை பெற வந்த நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக எமது சேய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் (Teaching Hospital – Anuradhapura) பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்து வருகிறது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (12/03/2025) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (11/03/2025) பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
நேற்றுமுன்தினம் (10/03/2025) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்திமுனையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.