விவசாயிகளுக்கு நட்டஈடு -அரசாங்கம் அறிவிப்பு!!
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படும் என கால்நடை வளர்ப்பு, பண்ணை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு மற்றும் பால் மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் இழக்கப்படும் உற்பத்திக்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும். ஆகவே விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. உதாரணத்திற்கு ஒரு ஏக்கருக்கு 100 நெல் மூடைகளை உற்பத்தி செய்யும் விவசாயி, சேதனப் பசளையினைப் பாவித்து 80 மூடைகளை மட்டும் விளைச்சலாகப் பெறும் போது நட்டம் ஏற்பட்ட 20 மூடைகளுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கும்.
அத்துடன் சேதன பசளை விவசாயிகளுக்கு வழங்கப்படும். குறைந்த விலையில் உரத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சேதனப் பசளை நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசியம் என்பன அதிகமாக இருப்பதனால் அதிக நன்மையை அடைய முடியும்.
இலங்கைக்கு இரசாயன உரத்தை கொண்டு வரும் ஒரு மாபியா கூட்டம் இருக்கின்றது. இதுவே சேதனப் பசளையை தவறாக சித்தரிக்க முற்படுகின்றது எனத் தெரிவித்தார்.