குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு- இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!
திருகோணமலைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்குடும்பப் பெண்ணே இவ்வாறு தற்கொலை முயற்சி மேற்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட மனைவி, கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று பகல் நடைபெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த வருடம் திருமணம் முடித்த நிலையில் தினமும் சண்டைகள் பிடிப்பதாகவும், இருவரும் சரியாக கதைப்பதும் இல்லையெனவும் அயலில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.
அதேபோலவே இன்றைய தினமும் சண்டை ஏற்படவே விரக்தியில் மனைவி 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாக அயல் வீட்டுக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கணவனை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.