போலி இரத்தினக்கற்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உரிய தகவல்களுடன் முறைப்பாடுகளைச் செய்யுங்கள்….. இரத்தினக்கல் அதிகார சபை!!

செயற்கையாக தயாரிக்கப்பட்ட போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் அத்தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி இரத்தினக்கல் சந்தைகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகப் பிரசித்தி பெற்ற இயற்கை இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ் பெற்று விளங்குகிறது.

இப்பிரதேசத்தில் கிடைக்கும் நீலம், சிவப்பு, ஆர்நூல் புஷ்பராகம், மரகதம், வைரோடி, பத்மராகம்,கெவுடா, பசிங்கல்  இரத்தினக்கற்கள் போன்றே இந்த போலி கற்களும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயமாக இப்பகுதிகளிலுள்ள பல காவல்துறைகளிலும்  இரத்தினக்கல் அதிகாரசபையிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலி இரத்தினக்கற்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உரிய தகவல்களுடன் முறைப்பாடுகளைச் செய்யுமாறு இரத்தினக்கல் அதிகார சபை மற்றும் பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரத்தினக்கல் வர்த்தக சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதால் நடமாடும் இரத்தினக்கல் ஆய்வு கூடமொன்று இப்பிரதேசத்துக்கு அவசியம் என்பதை இத்தொழில் துறையில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *