பயணத்தடை தளர்வின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ள சேவை – சுகாதார நடைமுறைகளில் கடும் இறுக்கம்!!

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுமென போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் முதல் பல அத்தியாவசிய சேவைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணுவது அவசியமாகும்.

அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது. பயணத்தடை தளர்த்தப்பட்டவுடன் பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும்.

அரச மற்றும் தனியார் சேவையாளர்கள் கடமைக்கு வருகை தரும் நேரத்தை மாற்றியமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு சேவையாளர் ஒரு வாரத்தில் குறைந்தளவு நாட்களில் சேவைக்கு வருகை தரும் செயற்திட்டம் மீண்டும் செயற்படுத்தப்படும். அரச மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணம் செய்ய முடியும்.

அலுவலக புகையிரத சேவையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழலில் பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேவைற்ற பயணங்களை முடிந்தளவுக்கு குறைத்துக் கொள்வது அவசியமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *